Monday, January 15, 2018

மீள்வேனோ..!




மீள்வேனோ அன்பே நான் - உன்
விழுங்கிடும் பார்வையினின்று,
விழுந்ததும் தொலைந்தேனோ
காணவில்லை என் சுவடும் இன்று.!

சிறுபிழை இழைத்தேனோ நானும்
சரியாக உறங்கவில்லையே நாளும்
உன் கரம் கோர்த்தது பிழையெனில்,
உறக்கமும் வேண்டுமோ இனிமேலும்?

என்னோடு வருவாய் நீ என் வீடுவரையும்,
கண்ணசைவில் விடைபெறுவாய் ஒவ்வொரு முறையும்,
விடைத்தர விழையாது மனமும் ஏனோ,
உன் விழி விழுங்க துடிக்குதே.!

பிறர்மறைத்து உனை விழுங்கும் என் பார்வைகள்,
அதை அறிந்து புன்னகையில் விரியும் உன் இதழ்கள்,
இந்நாடகம் அறியாது என்தந்தை விழிக்கும் நொடிகள்,
சொல்லவும் வேண்டுமோ என் எண்ணங்கள்..!

சின்னதாய் ஒரு சிரிப்பு, சிலநேர கதைப்பு - கதைப்பினூடே
சிறு முத்தாய்ப்பு - கன்னத்திலேறும் சிவப்பு
பெருமிதமாக நீளும் உன் அணைப்பு - இதைத்தாண்டி
வாழ்வினில் ஏதடா கண்ணா சிறப்பு..?

நீண்ட பொழுதுகளும், நீளா கனவுகளும்,
விழித்த இரவுகளும், விடியா பகல்களும்,
சிரிக்கும் விழிகளும், விரிக்கும் கரங்களும்,
மீளவும் வேண்டுமோ நானும் ..?



No comments:

Post a Comment