Sunday, October 6, 2019

பேரன்பே காதல்❤️❤️❤️

ஒரு நாள் வரும், இதுவரை பொருத்த மனம், புதைத்த காயங்களை ஒருங்கே வெளிக்கொணர்ந்து ஒப்பாரி வைக்கும்..

இதுவரை தாங்கிய அவமானங்களும், கவலைகளும் தன்னை மீறி ஒன்றோடொன்று போட்டிப் போட்டு எது பெரிதென நிரூபித்துக் கொண்டிருக்கும்..

இது நாள் வரை வாய்ப்பும், வாய்தாவும் கொடுத்து வந்த காதல் மனம் மொத்தமாய் தீர்ப்பு வரைந்து மெளனமாய் காத்திருக்கும்...

அன்று காதல் புரிந்ததும், அவன் முன் தன் கர்வம் இழந்ததும் எண்ணி இன்று தன்னையே கூண்டில் ஏற்றி கெக்களிக்கும்...

செய்த தவறையே மீண்டும் செய்து அதற்காக வேண்டப்படும் மன்னிப்புகள் சூழ்நிலை கருதி செய்யும் சமரசங்கள் அன்றி திருத்தங்கள் அல்ல...

உன்னை எப்போது அடுத்தவர் முன் விட்டுத் தருகிறானோ, அன்றே இழக்கிறாய் நீ அவன் மனதின் மரியாதைக்குரிய இடத்தை...

உன் கண்ணீர் கண்டு இறங்காதவன், தன் தவறை உணர்ந்து திருந்தாதவன், உன் கவலைக் குறித்து கலங்காதவன், உன் அண்மை தொலைத்து உருகாதவன் உனக்கு ஒருபோதும் உரித்தானவன் அல்ல...!

அவனை எண்ணி எங்குவதும், பிரிவை ஏற்க தயங்குவதும் இங்கு நீ ஏற்றுக் கொள்ளும் சிறைவாசம், உன் உணர்விற்கு விதிக்கும் கடுங்காவல் தண்டனை...!

பிரிந்து செல்ல தயங்காதே மனமே... உனக்குள் இருக்கும் இந்த கொஞ்ச நஞ்ச காதலும், அவன் மேல் வைத்த இந்த கடைசி நம்பிக்கையும் இழக்கும் முன் பிரிந்து செல்...!

ஆம், அவனை முற்றிலும் வெறுப்பதற்குள் பிரிந்து செல், அவ்வளவில் தான் உன்னை வெறுத்தேனும் அவன் மீதுகொண்ட காதல் காக்கலாம், இன்னும் மிச்சமுள்ள காலத்திற்கு...!

பிரிவு முடிவன்று, சில பிரிவுகள் உடனிருத்தல் காட்டிலும் அலாதி காதலின் வெளிப்பாடு... அத்தகு பிரிவுகளை பேரன்பு எனக்கொள்க...!

#பேரன்பேகாதல் #ஆர்த்தி #கிறுக்கல்❤️❤️❤️

No comments:

Post a Comment